Tuesday, December 20, 2011

கவனத்தில் படிதல்

கொஞ்சம் கொஞ்சமாய் நீ
கவனம் பெறத் துவங்குகிறாய்
உன் குரலும் மொழியும்
மெல்ல மெல்ல பிடிக்கத்துவங்கி
பித்தமாய் மாறும் பாடலை ஒத்திருக்கிறது
நீ மொழியொன்றை வைத்திருக்கிறாய்
உனக்கே உனக்கேயான மொழியொன்று
நீ பெரும்பாலான சமயங்களில்
அம்மொழியில் மட்டுமே பேசுகிறாய்
அம்மொழி கிளைகளில் தொங்கும்
தூக்கணாங்குருவிகளின் கூடுகளைப் போல்
தோற்றமளிக்கிறது எனக்கு
வீசும் காற்றில்
ஆடும் கூடுகளின் திசைகளைக் கொண்டு
உன் மொழியை புரிந்துகொள்ள முயல்வதுண்டு
நீ அவ்வபோது உன் மொழியில்
கள்ளக்குறும்புகளை முத்தங்களை
பேசுவதாய் தோன்றுமெனக்கு
கொஞ்சம் கொஞ்சமாய்
உன் மீது பித்தேறத் துவங்குகிறது
நீ என் பித்தமாகத் துவங்குகிறாய்

#மூக்கனாங்கவுறு போல ஊன்னெனப்பு சீம்பாலு வாசம் போல உஞ்சிரிப்பு

very long time before

Wednesday, April 6, 2011

துயரத்தின் பாடல் (அ) உன்னை பொதிந்து வைத்திருக்கும் பாடல்களில் ஒன்று



மிகவும் பிடித்த அப்பாடலை
வெகுநாட்களுக்கு பிறகு
திரும்பத் திரும்ப கேட்டுக்கொண்டிருக்கிறேன்
அப்பாடல் ஒரு கடற்பறவையாய் மாறி
நினைவுக்கடலின் உள்ளேயும் வெளியேயுமாய்
பறந்து பறந்து
சில மீன் நினைவுகளை வேட்டையாடிக்கொண்டேயிருக்கிறது
உண்டு கொழுத்து
ஒரு கடற்பூதமாய் அப்பாடல் மாறுகிற கணத்தில்
துயரத்தின் மழை வலுக்கத்துவங்கும்
அம்மழையில் கரைந்து
நானெது என்றறியாத முடியாத வேளையில்
நீ சட்டென உயிர்பெற்று
முகத்திலறைந்துவிட்டுப் போவாய்
சற்றும் எதிர்பாராது அறைவாங்கிய
சிறுகுழந்தையென நிலைதடுமாறி
உன் பின்னால் ஓடிவருவேன்


image courtesy : fineartamerica.com

06.04.2011

Thursday, February 24, 2011

பெருவனத் தாலாட்டு (அ) வனநீலியின் பாடலில் துயில் கொள்ளும் காடு

பெருவனத்தை மெல்ல ஆக்ரமிக்கும்
கரும் இரவின்
இழைகளுலொன்று
நூற்றாண்டுகால மரமொன்றின்
கிளையில் வந்து அமர
தாய்ப்பறவைக்காக காத்திருக்கிற சிறுகுஞ்சுகள்
மிரட்சியடைந்து
பின் தாளா ஆர்வத்தில்
தம் சிறு அலகுகளால்
இரவின் இழையை பற்றியிழுக்கத்துவங்க
வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்த
வனநீலி
அச்சிறுபறவைகளுக்காக
பாடலொன்றை பாடத்துவங்குகிறாள்
மொத்தவனமும்
அப்பாடலின் கதகதப்பில்
துயிலத் துவங்குகிறது

# காடு வாசிக்க ஆரம்பித்திருக்கிறேன். நான் வாசிக்கும் முதல் ஜெமோ படைப்பு..
24.02.2011